×

அதிமுக மாஜி அமைச்சர் மருமகள் தீ விபத்தில் பலி

வேலூர்: அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகனின் மருமகள் நைட்டியில் தீ பிடித்து எரிந்ததில் படுகாயமடைந்த நிலையில் வேலூரில் சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார். தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அடுத்த கெரகோடஅள்ளியைச் சேர்ந்தவர் அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன். பாலக்கோடு தொகுதி எம்எல்ஏ.வான இவருக்கு மல்லிகா என்ற மனைவியும், சந்திரமோகன், சசிமோகன் ஆகிய 2 மகன்களும், வித்யா என்ற மகளும் உள்ளனர். 2வது மகன் சசிமோகனின் மனைவி பூர்ணிமா (30). இவர்களுக்கு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்த நிலையில், ஒரு ஆண் குழந்தை உள்ளது. கே.பி.அன்பழகனுடன் அவரின் 2 மகன்களும் கூட்டுக்குடும்பமாக வசித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 18ம் தேதி மாலை பூர்ணிமா வீட்டின் பூஜை அறையை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது பூஜை அறையில் எரிந்து கொண்டிருந்த குத்துவிளக்கில் இருந்து பூர்ணிமாவின் நைட்டியில் தீப்பற்றியதாக தெரிகிறது.

சிறிது நேரத்தில் தீ மளமளவென பற்றி எரிந்ததில் அதிர்ச்சி அடைந்த பூர்ணிமா கூச்சல் போட்ட நிலையில் மயங்கி விழுந்தார். இதையடுத்து சத்தம் கேட்டு வீட்டில் இருந்தவர்கள் ஓடிச்சென்று படுகாயத்துடன் கிடந்த பூர்ணிமாவை மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று காலை பூர்ணிமா பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து காரிமங்கலம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். மேலும், பூர்ணிமாவுக்கு திருமணமாகி 5 ஆண்டுகளே ஆனதால் தர்மபுரி ஆர்டிஓ கீதாராணி விசாரணை நடத்தி வருகிறார்.

 

The post அதிமுக மாஜி அமைச்சர் மருமகள் தீ விபத்தில் பலி appeared first on Dinakaran.

Tags : AIADMK ,minister ,Vellore ,KP Anpahagan ,Kerakodaalli ,Karimangalam ,Dharmapuri district ,Balakot Constituency ,MLA ,Dinakaran ,
× RELATED அதிமுக முன்னாள் அமைச்சர் பொன்னையன் மனைவியிடம் மோசடி முயற்சி